Published : 23 Aug 2017 05:11 PM
Last Updated : 23 Aug 2017 05:11 PM

மாணவர்களைத் தாக்க கத்தியுடன் வந்த நபர்கள்: ஓட்டுநர் பேருந்து கதவைத் திறக்காததால் கண்ணாடி உடைப்பு

சென்னையில் கல்லூரி மாணவர்களைத் தாக்க கத்தியுடன் வந்த 5 நபர்களிடமிருந்து மாணவர்களைக் காக்க , பேருந்து ஓட்டுநர் பேருந்து கதவைத் திறக்காததால் கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தப்பி ஓடிய நபர்களைத் தேடி வருகின்றனர்

பட்டாபிராமிலிருந்து அண்ணா சதுக்கம் நோக்கி செல்லும் 40 ஏ மாநகர பேருந்து இன்று காலை பட்டாபிராமிலிருந்து அண்ணா சதுக்கம் நோக்கி வந்துகொண்டிருந்தது. பேருந்துக்குள் அதிக அளவில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருந்தனர்.

முகப்பேர் கலெக்டர் நகர் பேருந்து நிலையம் அருகே பேருந்து வரும் போது அடையாளம் தெரியாத 5 நபர்கள் கையில் கத்தியுடன் காத்திருந்தனர். அவர்கள் பேருந்தில் வரும் மாணவர்களைத் தாக்க கத்தியுடன் வந்துள்ளதை ஓட்டுநர் நெடுமாறன் பாபு(45) கவனித்து விட்டார். இதனால் பேருந்து கதவைத் திறக்கவில்லை. கத்தியுடன் வந்த நபர்கள் பேருந்து கதவைத் திறக்கச் சொல்லி ஓட்டுநரை மிரட்டினர்.

ஆனால் ஓட்டுநர் திறக்காமல் பேருந்தை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஐந்து பேரும் பேருந்து கதவை திறக்க முயற்சி செய்து தாக்கியதில் கண்ணாடி உடைந்தது.

ஆனால் ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டி பெரிய தாக்குதலிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றினார். கதவிலிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்தும் , மாணவர்களைத் தாக்க கத்தியுடன் வந்த நபர்கள் குறித்தும் ஓட்டுநர் நெடுமாறன் பாபு ஜெ.ஜெ.நகர் போலீஸில் புகார் அளித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x