Published : 17 Aug 2017 09:02 AM
Last Updated : 17 Aug 2017 09:02 AM

தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு: அரசு தரப்பு சாட்சிகளிடம் 28-ம் தேதி குறுக்கு விசாரணை

டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அரசு தரப்பு சாட்சி களிடம் வரும் 28-ம் தேதி குறுக்கு விசாரணை நடத்த எழும்பூர் பெருநகர நீதிமன்ற கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள வங்கி, நிறுவனங்களில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்யப்பட்டதாக டிடிவி தினகரன் மீது கடந்த 1996-ம் ஆண்டு எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் (பொருளாதார குற்றம்) அமலாக்கத் துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தினகரன் மீது அண்மையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க போதிய வாய்ப்பு வழங்கவில்லை என்பதால், அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து தினகரன் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம், மீண்டும் புதிதாக குற்றச்சாட்டு பதிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

‘குற்றச்சாட்டு பதிவு செய்த பிறகு, அரசு தரப்பு சாட்சிகளிடம் தனது தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். ஆனால், அன்று தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் அந்த குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று உயர் நீதிமன்றத்தல் தினகரன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அரசுத் தரப்பு சாட்சிகளை தினகரன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு, எழும்பூர் பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் (பொருளாதார குற்றம்) எஸ்.மலர்மதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் தினகரன் ஆஜரானார்.

அரசுத் தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த விரும்புகிறீர்களா என அவரிடம் நீதிபதி கேட்டார். குறுக்கு விசாரணை நடத்த விரும்புவதாக தினகரன் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்த அவகாசம் வழங்குமாறு நீதிபதியிடம் அமலாக்கத் துறை வழக்கறிஞர் கோரினார். அதைத் தொடர்ந்து, விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று தினகரன் மற்றும் அரசுத் தரப்பு சாட்சிகள் ஆஜராக வேண்டும். அப்போது அரசுத் தரப்பு சாட்சி களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x