Published : 05 Aug 2017 03:24 PM
Last Updated : 05 Aug 2017 03:24 PM

நேற்று வரை அதிமுக அரசில் இருந்த ஓபிஎஸ் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது: துரைமுருகன்

 

அதிமுக அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து ஒரு சிறு குழுவை வைத்துக் கொண்டு, ''அதிமுக கட்சியும் எனதே! அடுத்த முதல்வர் பதவியும் எனதே!'' என்று அரசியல் உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கும் மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்த பன்னீர்செல்வமும், அவருடைய அண்ட் கோ-க்களும், சென்னை குடிநீர் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் படித்தபோது, அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

சென்னை என்பது ஒரு நகரம். அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு உயிர்வாழ குடிக்க தண்ணீர் அவசியம். அதைத் தரவேண்டியது அரசின் கடமை என்ற ஞானோதயம் பன்னீர்செல்வத்திற்கு இப்பொழுதுதானா வந்தது. ஐயோ, பாவம்! சென்னை மக்கள்..!

சென்னைக்கு குடிநீர் எங்கெல்லாமிருந்து வருகிறது, அதை யார் கொண்டு வந்தார்கள் என்று பார்ப்போம். சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்கள், பூண்டி - சோழவரம் - புழல் - செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளும் மற்றும் நிலத்தடி நீரும் ஆகும். சென்னை மாநகரத்தில், ஆண்டுக்காண்டு மக்கள் தொகை, அதிகரித்துக் கொண்டே போவதாலும் - பருவமழையும் அடிக்கடி பொய்த்து விடுவதாலும், இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர், விநியோகத்திற்கு போதவில்லை.

எனவே, வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் நிலை அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. அவற்றில் ஒன்றுதான்,

1) கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம்

இத்திட்டத்திற்கு 1983ஆம் ஆண்டு, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரும், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவும் ஒருவித உடன்படிக்கைக்கு வந்தார்கள், அவ்வளவுதான். அடுத்து ஒரு காரியமும் நடைபெறவில்லை. பின்னர், எம்.ஜி.ஆர். மறைந்தார், திட்டமும் கிடப்பில் கிடந்தது.1989-ல் தலைவர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். அந்தத் திட்டத்தை தூசு தட்டி, கையில் எடுத்து, ஆந்திர அரசாங்கத்தோடு ஒப்பந்தம் போட்டார்.

அந்த ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து - சோமசீலா மற்றும் கண்டலேறு நீர்த்தேக்கங்கள் வழியாக, கால்வாய் வெட்டி, 12 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பது, பின்னர் புழல் ஏரி வழியாக சென்னை மாநகர மக்களுக்கு குடிநீராக வழங்குவது என்பது திட்டம்.

இந்த மகத்தான பொறுப்பை என் தலைவர், முதல்வர் கருணாநிதி என்னிடம் ஒப்படைத்தார். அந்த பணியினை செவ்வனே முடிக்கப்பட்டு, சென்னைக்கு கிருஷ்ணாநதி நீர் தரப்பட்டது. இது கருணாநிதி ஆட்சியில் செய்த சாதனை.

2) கடல்நீரை குடிநீராக்கி சென்னை மக்களுக்கு வழங்கும் திட்டம்

இத்திட்டத்தையும் அன்றைய முதல்வர் தலைவர் கருணாநிதியின் ஆணைக்கு ஏற்ப செய்து முடித்தவர், அத்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின். மாமல்லபுரம் போகும் கிழக்கு கடற்கரைச் சாலையில் நெம்மேலி என்ற இடத்தில், நாள் 1க்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைத் துவக்கி, அதன் எல்லா பணிகளும் முடித்த போது எங்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா, இத்திட்டத்திற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடாமல், ஆனால் இந்த திட்டத்தை திறந்து வைத்து தன் பெயரை மட்டும், கல்வெட்டில் போட்டுக் கொண்டார்.

3) மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

இந்தத் திட்டத்தையும் துவக்கியவரும் தலைவர் கருணாநிதிதான். இங்கேயும் நாள் 1க்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் DBOOT திட்டப்படி, குடிநீராக்கி சென்னைக்கு வழங்கினார். இங்கேயும் அதிமுக அரசின் பங்கு பூஜ்யம்.

அத்திபூத்தது போல், அதிமுக ஆட்சியிலும் ஒரு திட்டம் வந்தது. அதுதான் புதிய வீராணம் திட்டம். வீராணம் ஏரி, காவிரியை நம்பி இருக்கும் ஏரி. காவிரியில் தண்ணீர் வராதபோது, வீராணத்தில் தண்ணீர் இருக்காது. எனவே, இத்திட்டம் பெயர் அளவிற்குத்தான் உள்ளது.

அதிமுக ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதாவின் ஆட்சியில், பன்னீர்செல்வத்தின் பரிபாலனத்தில், சென்னை மாநகரத்துக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க, ஏதாவது ஒரு திட்டம் தீட்டி நிறைவேற்றியது உண்டா? ஆனால், வெற்று அறிவிப்புகள் - பொய்யான உறுதிமொழிகள் வழங்கியதில் மட்டும் குறைச்சல் இல்லை.

தலைவர் கருணாநிதியின் ஆணையை ஏற்று, அன்றைய உள்ளாட்சித் துறையை வைத்திருந்த ஸ்டாலின் முயற்சியால் முடித்து வைக்கப்பட்ட நெம்மேலி திட்டத்தை 22-2-2013 அன்று திறந்து வைத்து முதல்வரான ஜெயலலிதா என்ன பேசினார்? நெம்மேலியில் நாள் 1க்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்று புதியதாக துவங்கப்படும் என்று பேசினாரா? இல்லையா?ஜெ. பேசியது 2013ஆம் ஆண்டில். இப்போது 2017, இதுவரை அந்த திட்டம் துவக்கப்பட்டதா?

அதே உறுதிமொழியை சட்டமன்றத்தில் குடிநீர் துறையை வைத்திருந்த கே.பி.முனுசாமி 2012-2013ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை புத்தகத்தில் 'Board to establish one more Desalination Plant of 400 MLD Capacity at Nemmeli' என்று படித்தாரா? இல்லையா?

2013-2014ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், அதே உறுதிமொழியை, நெம்மேலி அருகே நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்றினை நிறுவி..... நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன என்று படித்தாரே? செயல்படுத்தப்பட்டதா? ஒரு சொட்டு கடல் நீரையாவது தொட்டுப் பார்த்தது உண்டா?

2015-2016ஆம் ஆண்டு குடிநீர் வழங்கல் மானியக் கோரிக்கைஇந்த மானியக் கோரிக்கையில் என்ன புதுமை?கே.பி.முனுசாமி பதிலாக, எஸ்.பி.வேலுமணி இந்த துறைக்கு அமைச்சராக வந்ததுதான். அமைச்சர் மாறினாரே தவிர, உறுதிமொழி மாறவில்லை.

இவரும் அவரைப் போலவே,

''நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.4,070.67 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது'' என்று ஏற்கெனவே சொன்னதையே திருப்பிப் படித்தாரே தவிர, செயல்படுத்தவில்லை.

அடுத்து, 2017-2018ஆம் ஆண்டு குடிநீர் வழங்கல் மானியக் கோரிக்கையில், அதே எஸ்.பி.வேலுமணிதான் அமைச்சர்.

இந்த வருடமும், அதே பல்லவிதான். ''மறைந்த தமிழக முதல்வரால் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் பட்டிபுலத்தில் அமைக்கப்படும்'' என்று பாட்டையே திருப்பி பாடினார்.

ஆக, 2012-2013ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் ''400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கப்படும்'' என்ற உறுதிமொழியை திருப்பி திருப்பி சொல்ல, வெட்கப்பட்டிருக்க வேண்டாமா.. பன்னீர்செல்வம்.

நெம்மேலியில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்று, இங்கே பட்டிபுலத்தில் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா தான் 22-2-2013 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பைத்தான் திருப்பி திருப்பி, ஒவ்வொரு ஆண்டு மானிய கோரிக்கையில் அமைச்சர்கள் படிக்கிறார்களே தவிர, ஒரு அடி முன்னேற்றம் இல்லை. இந்த அறிவிப்பே, இப்படியே கிடப்பில் இருக்கும்போது, சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்காத ஜெயலலிதா 16-4-2013 அன்று சட்டமன்றத்தில் விதி-110ன் கீழ், ஒரு அறிக்கையை படித்தார்.

''அதாவது நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீராக்க, நெம்மேலி அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் உள்ள 10.50 ஏக்கர் காலி இடத்தில் அமைக்கப்படும்'' என்ற வாக்குறுதி அளித்தாரே, அதையாவது நிறைவேற்ற முயற்சித்ததுண்டா? ஆனால், அமைச்சர் வேலுமணி, ஜெயலலிதா முதலில் சொன்ன அறிவிப்போடு, இந்த அறிவிப்பையும் இரண்டு ஆண்டுகளாக மானியக் கோரிக்கையில் படித்து வருகிறார்.

ஆக, ஒரு திட்டத்தை 2013-ஆம் ஆண்டு சொல்லத் தொடங்கி, அதையே 2017-ஆம் ஆண்டு வரை, மானியக் கோரிக்கையில் திருப்பி திருப்பி படித்துக் கொண்டேயிருக்கின்ற நிலைக்கு கொஞ்சம்கூட வெட்கப்படாத அரசு, அதிமுக அரசு. அந்த அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது.

இந்த அரசை நினைத்தால், இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே என்று எம்.ஜி.ஆர். பாடியதுதான் நினைவுக்கு வருகிறது'' என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x