Published : 08 Aug 2017 03:34 PM
Last Updated : 08 Aug 2017 03:34 PM
சகாயம் ஐஏஎஸ் அதிகாரி தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் பல்வேறுதரப்பட்ட சுரங்க நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க நீதிமன்றம் நியமித்த சட்ட ஆணையராவார் சகாயம். இந்நிலையில் திங்களன்று சகாயம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
மதுரையில் கிரானைட் முறைகேடு நடைபெறுகிறது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 2013-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இதன் மீது விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
சகாயத்தின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், சகாயத்தின் விசாரணை காலத்தை நீட்டிக்கக் கோரினார். அதன்படி இறுதி அறிக்கைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31, 2017 வரை கோர்ட் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
மேலும் சகாயத்துக்கு இந்த விசாரணையில் உதவிபுரிந்த சேவற்கொடியோன் என்பவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மனு அளித்தார். மேலும் சகாயத்திற்கு உதவி புரிந்த எஸ்.பார்த்தசாரதியின் மரணம் குறித்து விரிவான விசாரணை வேண்டுமென்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் முறையிட்டார். ஏப்ரல் 2015-ம் தேதி மதுரை அருகே கார் மரத்தில் மோதி பார்த்தசாரதி உயிரிழந்தார்.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT