Published : 30 Aug 2017 09:04 AM
Last Updated : 30 Aug 2017 09:04 AM

பொதுக் கழிப்பறைகளில் தூய்மையை உறுதி செய்ய கைபேசி செயலி மூலம் கண்காணிக்க மாநகராட்சி நடவடிக்கை: இனி தூய்மை செய்ததின் அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படும்

சென்னை மாநகராட்சி பொதுக் கழிப்பறைகளில் தூய்மையை உறுதி செய்ய, அவற்றை கைபேசி செயலி மூலம் கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகரப் பகுதியில் பொது இடங்களில் சுகாதாரத்தை காக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 866 அமைவிடங்களில் 6 ஆயிரத்து 641 பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

குழந்தைகள் திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை தடுக்க, 78 இடங்களில் குழந்தைகளுக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 281 அமைவிடங்களில் 768 நவீன கழிப்பறைகளும் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கழிப்பறைகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி அசுத்தமாக இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கட்டணம் வசூலிப்பு

மேலும் மாநகராட்சி கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்து, இலவசமாக்கியுள்ள நிலையில், தனியார் ஒப்பந்ததாரர்கள் நியமித்துள்ள பராமரிப்பு பணியாளர்கள், கட்டணம் வசூலித்தும் வருகின்றனர். அவசரம் காரணமாக பொதுமக்களும் இதுகுறித்து மாநகராட்சியில் புகார் தெரிவிப்பதில்லை.

இந்நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் 1,147 அமைவிடங்களில் உள்ள 7 ஆயிரத்து 409 கழிப்பறைகள் மற்றும் 78 குழந்தைகள் கழிப்பறைகளைக் கைபேசி செயலி மூலம் கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான பயிற்சிகள், மாநகராட்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது:

பிரத்யேக செயலி

மாநகராட்சி கழிப்பறைகளில் தண்ணீர் இருப்பு, அவற்றின் தூய்மையை நேரில் சென்று கண்காணிப்பது சிரமம். அதனால் பிரத்யேக கைபேசி செயலி மூலம் கண்காணிக்க திட்டமிட்டிருக்கிறோம். அத்தகையை செயலி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதியில் உள்ள துப்புரவு மற்றும் சுகாதார அலுவலர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை நேரில் சென்று படம் எடுத்து, பிரத்யேக செயலி மூலமாக பதிவேற்ற வேண்டும். அதை கண்காணிக்க அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். அதில் குறைகள் இருப்பின், உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப் படும்.

அமைவிடத்தை தெரிந்துகொள்ள

ஸ்மார்ட் கைபேசி வைத்திருக்கும் நபர் ஒருவர், பிரத்யேக செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால், அதன்மூலம் தான் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கழிப்பறைகளின் அமைவிடங்களைத் தெரிந்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த கழிப்பறைகளைப் பராமரிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு, அவர்கள் பராமரிக்கும் தூய்மைக்கு ஏற்ப அவர்களுக்கு பணம் வழங்கவும் ஆலோசித்து வருகிறோம்.

இதன்மூலம் மாநகராட்சி கழிப்பறைகளின் தூய்மை உறுதி செய்யப்படும். இதற்கு முன்பு, ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, முழு தொகை வழங்கப்பட்டு வந்தது குறிப் பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

180 மின்னணு கழிப்பறைகள்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ‘ஏரம் சயின்டிபிக் சொல்யூ ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட 180 மின்னணு கழிப்பறைகள் சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டன. இதே போன்று பெங்களூரு மாநகராட்சிக்கும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது. அந்நிறுவனம் சார்பில் இரு மாநகராட்சிகளுக்கும் தனித்தனியாக ஆன்ட்ராய்டு செயலிகள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கான சர்வர்களை அந்நிறுவனமே நிர்வகித்து வருகிறது.

கைபேசி செயலி வழியே...

அந்த செயலிகள் மூலம், பொதுமக்களுக்கு அருகில் உள்ள, அந்நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ள மின்னணு கழிவறைகளின் அமைவிடங்களை மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். நீர் இருப்பு மற்றும் கழிவறையின் நிலை குறித்து தெரிந்துகொள்ளும் வசதியை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஆனால் மாநகராட்சி உருவாக்கும் கைபேசி செயலியில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 7 ஆயிரத்து 487 கழிவறைகளின் அமைவிடங்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

மாநகராட்சி அலுவலர்கள், கழிப்பறைகளின் நிலையை தினமும் படம் எடுத்து, பதிவேற்றம் செய்ய முடியும். கழிப்பறைகள் குறித்து பொதுமக்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x