Published : 06 Aug 2017 11:42 AM
Last Updated : 06 Aug 2017 11:42 AM

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலருக்கு பணி மறுக்கப்பட்டதைக் கண்டித்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்எல்சி முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை, மாதத்துக்கு 26-ல் இருந்து 19-ஆக நிர்வாகம் குறைத்துள்ளது. இதனைக் கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கடந்த 12-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம், மறியல், அலுவலக முற்றுகை, அதிகாரிகள் சிறைப்பிடிப்பு என பல கட்ட போராட்டங்களை நாள்தோறும் நடத்தி வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி கடலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பணிக்குச் சென்ற ஒப்பந்த தொழிலாளர்கள் அந்தோணிசெல்வராஜ், பூவராகவன், சங்கர் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த 13-ம் தேதி அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக இவர்கள் மீது நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் இருந்து, ‘வழக்கு இல்லை’ என்று சான்று வாங்கி வந்தால்தான் பணி தர முடியும் என என்எல்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் பணியில் இருந்த 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து சுரங்க வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்எல்சி அதிகாரிகள் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றும் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், நேற்று காலை 6 மணி முதல் பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x