Published : 20 Aug 2017 11:03 AM
Last Updated : 20 Aug 2017 11:03 AM

மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 152 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனத்தால் மழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பூண்டி ஏரிப் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 13 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் 21 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

புழல் ஏரிப்பகுதியில் அதிக பட்சமாக 1,355 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 75 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் 23 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதியில் 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. ஏரிக்கு வினாடிக்கு 152 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் 113 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரிப் பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளபோதிலும் ஏரிக்கு நீர்வரத்து அறவே இல்லை. நீண்டகாலமாக ஏரி வறண்டு கிடப்பதால் நீர்வரத்து இல்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 057 மில்லியன் கனஅடி. இவற்றில் தற்போதைய நீர்இருப்பு 157 மில்லியன் கனஅடி. கடந்தாண்டு இதேநாளில் நீர்இருப்பு 2 ஆயிரத்து 846 மில்லியன் கனஅடியாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x