Last Updated : 29 May, 2017 12:36 PM

 

Published : 29 May 2017 12:36 PM
Last Updated : 29 May 2017 12:36 PM

அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம்: 4 அணியாக செயல்படுவதால் குமரியில் தொண்டர்கள் குழப்பம்

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அதிமுக நான்கு அணியாக பிரிந்து கிடக்கிறது. கோஷ்டிபூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு குறைந்த வாக்கு வங்கி உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. தேசிய கட்சிகள் ஆதிக்கம் இங்கு ஓங்கி இருப்பதால் திராவிட கட்சிகளால் ஜொலிக்க முடியவில்லை. இதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியை கூட அதிமுகவால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்துக்கு பின் கன்னியாகுமரி அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

முதல்வரிடம் புகார்

ஏற்கெனவே முன்னாள் எம்எல்ஏ முத்து கிருஷ்ணன், பால்வளத்தலைவர் அசோகன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலைமையில் அதிமுகவில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தரப்பிலான அதிமுகவினர் தற்போதைய மாவட்ட செயலாளரான விஜயகுமார் எம்பிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே எதிரும் புதிருமாக இருந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர், விஜயகுமாரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்துள்ளனர். இதற்கிடையே நாஞ்சில் சம்பத் ஆலோசனையின் பேரிலும் கன்னியாகுமரியில் ஒரு பிரிவினர் மாவட்ட அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் விஜயகுமார், தொண்டர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாக, சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், பச்சைமால் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஏற்கெனவே கன்னியாகுமரியில் குறைந்த சதவீத வாக்கு வங்கி கொண்ட அதிமுக, தற்போது 4 கோஷ்டிகளாக பிரிந்துள்ளதால் மேலும் பலவீனம் அடைந்துள்ளது. தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

15 ஆண்டுகளாக…

மூத்த அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவினர் ஈரணியாக செயல்பட்டு வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின் எதிர்ப்பை வெளிப்படையாக காட்டி வருகின்றனர்’ என்றார் அவர்.

கண்டுகொள்ளவில்லை

விஜயகுமார் எம்பி கூறும்போது, ‘எனக்கு மாவட்ட செயலாளர், எம்பி பொறுப்பு ஆகிய இரண்டையுமே வழங்கியவர் ஜெயலலிதா. இதுவரை தொண்டரிடமோ, பொதுமக்களிடமோ பணம் பெற்றுக்கொண்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியது கிடையாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றேன். எனக்கு எதிரான புகார் குறித்து உண்மை நிலவரத்தை கட்சி தலைமையிடம் கூறிவிட்டேன். எனவே இவர்களின் எதிர்ப்பை நான் கண்டுகொள்ளவில்லை’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x