Published : 04 Aug 2017 09:41 AM
Last Updated : 04 Aug 2017 09:41 AM
சோலார் பேனல் வழக்கு விசாரணையில், கேரள முன்னாள் முதல்வர் மீதான குற்றம் நிரூபணமாகும் என்று சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்து தருவதாகக் கூறி மோசடி செய்ததாக கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி உள்ளிட்டோர் மீது 2009-ம் ஆண்டு கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணைக்காக சரிதா நாயரும், ரவியும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை செப்.8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் சரிதா நாயர் கூறும்போது, “சோலார் பேனல் நிறுவனம் நடத்த அப்போதைய அரசிடம் தடையில்லா சான்று பெற, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர்களுக்கு ரூ.20 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதான புகாரின்பேரில் சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. என்னிடமும் விசாரணை நடந்தது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் உள்ளிட்டோரின் தொடர்பு குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளேன். அந்த விசாரணை அறிக்கை, செப்டம்பர் இறுதியில் தாக்கல் செய்யப்படும். உண்மையாக விசாரணை நடக்கும்பட்சத்தில், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்டோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT