Published : 28 Aug 2017 10:52 AM
Last Updated : 28 Aug 2017 10:52 AM

எம்எல்ஏ.,க்கள் கூட்டத்துக்கு எங்களுக்கு ஏன் அழைப்பில்லை: தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கூட்டத்திற்கு எங்களுக்கு ஏன் அழைப்பு அனுப்பவில்லை என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தபிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தணி அணியாக இயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர்.

பின்னர் அனைவரும் புதுச்சேரி சென்று அங்கே உள்ள விடுதியில் ஒன்றாகத் தங்கியுள்ளனர். 19 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் பேரவைத்தலைவருக்கு பரிசீலனை கடிதம் அளித்தார்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து மேலும் மூன்று எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு கொடுத்தனர். தினகரன் தரப்பில் அடுத்தடுத்து கட்சியிலிருந்தும் , பொறுப்பிலிருந்தும் பலரையும் அதிரடியாக நீக்கி வருகின்றனர். இதுபற்றி முடிவெடுக்க அதிமுக தரப்பில் இன்று எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டம் பற்றி கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் இந்த கூட்டத்திற்கு ஏன் அழைப்பு அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் இன்னும் அதிமுக எம்.எல்.ஏக்கள் தானே. எங்களை அழைக்காமல் எப்படி கூட்டம் நடத்த முடியும். எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும், இப்போதும் நாங்கள் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தானே எங்களை அழைக்காமல் ஏன் கூட்டம் நடத்துகின்றனர்.

இப்படி நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நாங்கள் எப்படி ஏற்போம் என்று கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x