Published : 16 Aug 2017 12:05 PM
Last Updated : 16 Aug 2017 12:05 PM
மதுரையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் இம்முறை பாரம்பரிய விளையாட்டான ‘ மல்லர் கம்பம்’ ஏறுதல் என்ற வித்தியாசமான நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மதுரை மாவட்டம், கல்லுப்பட்டி அருகிலுள்ள பாப்பநாயக்கன்பட்டி கந்தசாமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மல்லர் கம்பம் ஏறுதல் நிகழ்ச்சியை நடத்தினர். இதற்காக மைதானத்தில் சுமார் 12 அடி உயர வழுக்கு மரம் போன்ற ஒரு மரம் நடப்பட்டு இருந்தது. ஆதிவாசிகளை போன்று வேடமிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து வழுக்கு மரத்தில் ஏறி யோகாசனங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு சாகசங்களை தத்ரூபமாக செய்து காட்டினர்.
ஆட்சியர் கொ. வீரராகவராவ், தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து மைதானத்துக்குள் சென்று அம்மாணவர்களை பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதுபற்றி மல்லர் கம்ப பயிற்சியாளர் ரமேஷ் கூறியதாவது: தமிழர் பாரம்பரியக் கலையான ‘மல்லர் கம்பம்’ கலையை பல்வேறு இடங்களில் கற்று தருகிறேன். கல்லூரிகள் அளவில் ஒருசில இடங்களில் மட்டும், இக்கலை விளையாட்டு போட்டியில் இடம் பெற்றாலும், பள்ளிகள் அளவில் ‘மல்லர் கம்பம்’ கலைக்கென முக்கியத்துவம் இல்லை.
ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இக்கலைக்கு வரவேற்பு உள்ளது. யோகா தொடர்பான ஆசனங்களின் அடிப்படையில் இக்கலையை கற்க முடியும். கல்லுப்பட்டி பகுதியில் இக்கலையை கற்க பெற்றோர்களும் உற்சாகம் அளிக்கின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT