Published : 01 Aug 2017 03:39 PM
Last Updated : 01 Aug 2017 03:39 PM

ரேஷன் பொருள் விநியோகத்தில் பழைய முறையே தொடர வேண்டும்: திருமாவளவன்

ரேஷன் பொருள் விநியோகத்தில் பழைய முறையே தொடர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஏராளமான புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். பட்டினி சாவுகளுக்கு வழி வகுக்கும். எனவே இந்த விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

ரேஷன் பொருட்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் விதிகள் இனிமேல் எவருக்கும் ரேஷன் பொருள் கிடையாது என்ற நிலையை உண்டாக்கியிருக்கிறது. வாக்களித்த மக்களின் வயிற்றில் அடிப்பதாக இந்த அறிவிப்பு உள்ளது. மத்திய அரசின் விதிகளை மாநில அரசு வெளியிட்டிருந்தாலும் ரேஷன் விநியோகத்தில் மாற்றம் இல்லை என அமைச்சர் விளக்கம் சொன்னாலும் அதை நாம் நம்புவதற்கில்லை. எனவே மாநில அரசு இந்த விதிகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நான்கு ரூபாய் உயர்த்துவதென்றும், சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படுமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பாக மத்திய அமைச்சர் இன்று அளித்த விளக்கம் அந்தச் செய்தியை மறுப்பதாக இல்லை. முறைப்படுத்தப் போகிறோம் என அவர் கூறினாலும் படிப்படியாக மானியம் ரத்து செய்யப்படும் என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் , எரிவாயு ஆகியவற்றின் விலை கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறைவாக உள்ள நிலையில் எரிவாயுவின் விலையை உயர்த்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கே வழிவகுக்கும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசும் இதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x