Published : 24 Aug 2017 10:44 AM
Last Updated : 24 Aug 2017 10:44 AM
முதல்வர் பழனிசாமியை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வில் தமிழகம் கடைப்பிடித்து வந்த சமூக நீதிக்கு சமாதி கட்டும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகள், கூலித் தொழில் செய்வோரின் பிள்ளைகள் இனி டாக்டர் ஆக முடியாது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை மோடி அரசு மோசடி செய்துவிட்டது.
நளினி சிதம்பரம் வழக்கறிஞராக இருந்து வாதாடுவது அவரது உரிமை. ஆனால், நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர் தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபடுவது அவரது கருத்தா அல்லது ப.சிதம்பரத்தின் கருத்தா அல்லது காங்கிரஸ் கட்சியின் கருத்தா என்பதை விளக்க வேண்டும்.
தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதாகக் கூறி, தனித்தனியாக தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அது உண்மை என்றால், பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்காது. எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வரை ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT