Published : 22 Aug 2017 10:26 AM
Last Updated : 22 Aug 2017 10:26 AM

ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய பதில் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய பதில் மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன்கூட்டியே விடு தலை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.

நீதிபதிகள் கேள்வி

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு கடந்த 2012-ல் தயாரித்த பதில் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவைப் படித்துப்பார்த்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன? என்று கேள்வி எழுப்பி புதிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று புதிய பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக உள்துறைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பதில் மனுவில், “இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதால் தற்போது ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது” என்று கூறப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று (செவ் வாய்க்கிழமை) நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x