Published : 06 May 2017 08:42 PM
Last Updated : 06 May 2017 08:42 PM

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: கருணாஸ்

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என எம்.எல்.ஏ.வும், நடிகருமான கருணாஸ் கூறியுள்ளார்.

அதிமுகவில் இரு அணிகள் பிரிந்த போது, சசிகலா அணியில் இருந்தவர் திருவாடாணை எம்எல்ஏ நடிகர் கருணாஸ். பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

தற்போது அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து, பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நான் தலையிட முடியாது. நான் என் தொகுதியில் ஜாதி வாக்குகளை நம்பி போட்டியிட்டிருந்தால், குறைந்த வாக்குகளே கிடைத்திருக்கும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நான் தற்போது எம்எல்ஏவாக உள்ளேன். ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. குடிநீர்தட்டுப்பாடு, வறட்சி, மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்ந்து உள்ளன. அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதற்காக நிலையான ஆட்சி அமைய வேண்டும்.

அதிமுகவை பலப்படுத்திவிட்டால் அதில் யாரும் நுழைய முடியாது. இருஅணிகளையும் இணைக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். அதிமுக தலைமையின் முடிவுக்கு ஆதரவு கட்சியான முக்குலத்தோர் புலிப்படை உறுதியாக இருக்கும். இரு அணிகளும் ஆட்சி தொடர வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு மாறாக தற்போதைய நிகழ்வுகள் உள்ளன'' என்று கருணாஸ் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x