Published : 05 Aug 2017 02:00 PM
Last Updated : 05 Aug 2017 02:00 PM

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை கைவிடுக: முத்தரசன்

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நிறைவேற்றுவதற்கு மாறாக, பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற ஜனநாயக முறையில் நடைபெறும் இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பதுடன், அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்து அரசைக் கோரி வருகின்றனர்.

மாநில அரசு சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வராமல் காலம் தாழ்த்தும் காரணத்தால், அவர்கள் ஒன்றுபட்ட இயக்கத்தின் மூலமாக அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.

அரசு அவர்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நிறைவேற்றுவதற்கு மாறாக, பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற ஜனநாயக முறையில் நடைபெறும் இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பதுடன், அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது.

அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட்டு, அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுகாண வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x