Published : 24 Aug 2017 07:13 PM
Last Updated : 24 Aug 2017 07:13 PM

19 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் நடைமுறையில் சாத்தியமா?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் அளித்திருந்தனர். அந்தக் கடிதத்தில் எடியூரப்பா விவகாரம் பற்றியும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையில் திடீர் திருப்பமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை செய்வதாக அரசு கொறடா ராஜேந்திரன் இன்று பேட்டி அளித்தார்.

இதன் மூலம் மீண்டும் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒரு கட்சி எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு கொறடாவுக்கு மட்டுமே உண்டு. கொறடா உத்தரவை மீறினால் அந்த உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால் தற்போது எழுந்துள்ள சூழ்நிலை வித்தியாசமாக உள்ளது.

இது பற்றி அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொறடா தற்போது 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி அரசுக்கு எதிராக செயல்படக் கூடாது என்ற எச்சரிக்கையோ , ஏன் ஆளுநரிடம் மனு அளித்தீர்கள் என்று விளக்கம் கேட்டு கடிதமோ அளிக்காத நிலையில் எந்த அடிப்படையில் இந்த பரிந்துரையை சபாநாயகருக்கு அளிக்கிறார் என்பது தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

சட்டமன்றத்தில் கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படக் கூடாது என்று கொறடா கட்டளையிடலாம் , ஆனால் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டது குறித்த விளக்கம் கேட்காமலே பரிந்துரைப்பது ஒரு விளைவையும் ஏற்படுத்தாது. இது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு யாரும் செல்லக் கூடாது என்பதற்கான மிரட்டலாக மட்டுமே பார்க்கமுடியும். இந்த நடவடிக்கைகள் அதிமுக அணியினர் மத்தியில் ஒரு பதற்றம் இருப்பதைக் காட்டுகிறது என்று தினகரன் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

விளக்கம் கேட்டு கடிதமோ , தினகரனுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என்ற உத்தரவையோ கொறடா பிறப்பிக்காத நிலையில் இந்த பரிந்துரைக்கு எந்த அளவுக்கு வலு உள்ளது என்பது கேளிவிக்குறிதான் என்று அரசியல் நோக்கர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அளித்த பரிந்துரை போல் ஏற்கெனவே ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களுக்கு எதிராகவும்தான் பரிந்துரை செய்ததாகவும் அதுவும் சபாநாயகரிடம்தான் உள்ளது என்று கொறடா ராஜேந்திரன் தெரிவித்திருப்பதன் மூலம் இது சாதாரண அச்சுறுத்தும் நிகழ்வாகவே பார்க்க வேண்டும் என்று தினகரன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x