Published : 31 Aug 2017 10:01 AM
Last Updated : 31 Aug 2017 10:01 AM

அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசினால் வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர்: சசிகலா சகோதரர் திவாகரன் குற்றச்சாட்டு

‘அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசினால் என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் வழக்கு போட்டு அசிங்கப்படுத்துவோம் என செல்போனில் மிரட்டல் விடுக்கின்றனர்’ என்று அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம்சாட்டி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: எனது செல்போனுக்கு சென்னையில் இருந்து லேண்ட்லைன் போனில் தொடர்புகொண்டு என்னிடம் பேசியவர், தன்னை உளவுப்பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர், நான் அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதை நிறுத்தாவிட்டால், என் மீதும், என் மகன் ஜெயஆனந்த், விவேக் உட்பட எனது குடும்பத்தினர் மீதும் பெண்களைத் தொடர்புபடுத்தி வழக்குகளைப் போட்டு அசிங்கப்படுத்துவோம் என்று கூறினார். தினகரனை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் மீது வழக்கு போட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து புகார் செய்யவுள்ளோம். தமிழகத்தில் பலரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க தனியார் ஏஜென்சிகளை நியமித்துள்ளனர்.

செப்.12-ல் முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் இணைந்து நடத்தவுள்ள பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லாது. பொதுக்குழுவைக் கூட்ட பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆனாலும், எங்கள் தரப்பில் உள்ள நிர்வாகிகளை அழைத்தால் கலந்துகொள்வார்கள்.

தற்போது தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், தலைமைச் செயலகத்தில் வேகமாக கோப்புகளில் கையெழுத்திடும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளதால், இதில் ஆளுநர் தலையிட்டு, அரசியல் நிலைத்தன்மை வந்தவுடன் புதிய திட்டங்களையோ அல்லது பணிகளையோ மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்.

அடுத்த கட்டமாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிட தினகரன் அணியின் 19 எம்எல்ஏக்களும் திட்டமிட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x