சசிகலா அடையாளம் காட்டிய எடப்பாடியை ஏற்க முடியாது: கே.பி.முனுசாமி

சசிகலா அடையாளம் காட்டிய எடப்பாடியை ஏற்க முடியாது: கே.பி.முனுசாமி
Updated on
1 min read

தமிழகத்தில் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி தொடர வேண்டுமானால் ஜெயலலிதா அடையாளங்காட்டியவர் முதல்வராக வேண்டும். எடப்பாடி சசிகலாவால் வந்தவர் அவரை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அளித்த பேட்டி:

அதிமுக-வின் அணிகள் இணைவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையான தொண்டர்களும் ஜெயலலிதாவால் அடையாளங்காட்டப்பட்ட அமைச்சர்களும் அணிகள் இணைவதை விரும்புகின்றனர்.

சசிகலா குடும்பத்தின் மூலம் அமைச்சரானவர்கள் தான் முரண்படுகின்றனர். தம்பிதுரை போன்றவர்களுக்கு சசிகலாதான் தலைவர். எனவே, சசிகலாவுக்கு விசுவாசமாகத் தான் அவர் பேசுவார்.

தமிழகத்தில் ஜெயலலிதா விரும்பிய மக்களுக்கான ஆட்சி இல்லை. ஜெயலலிதா விரும்பிய ஆட்சி தொடர வேண்டுமானால் ஜெயலலிதா அடையாளங்காட்டியவர் முதல்வராக வேண்டும். எடப்பாடி சசிகலாவால் வந்தவர் அவரை ஏற்க முடியாது.

இவ்வாறு தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in