

பணி ஓய்வுக்கு பிறகும் மக்களுக்காக பாடுபடுவேன் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி கூறியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலிக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. சென்னை இக்சா மையத்தில் நடந்த இந்த பாராட்டு விழாவை சோக்கோ அறக்கட்டளை, பாரதி அறக்கட்டளை, இருளர் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி பேசியதாவது:
நான் பல்வேறு பதவிகள் வகித்திருந்தாலும், சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்த காலகட்டத்தை பொற்காலமாக கருதுகிறேன். இந்த காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல்ல காரியங்களை செய்திருக்கிறேன். ஓய்வுக்கு பிறகும் மக்கள் நலனுக்காக நான் பாடுபடுவேன்.
பெண்கள் மேம்பாட்டுக்காக கல்வி கொடுத்தோம். பொருளாதார மேம்பாட்டுக்காக வேலைவாய்ப்பும் கொடுத்தோம். அப்போதும் பெண்கள் மேம்படவில்லை. அவர்கள் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழ வேண்டும். அப்போதுதான் அவர்கள் மேம்பாடு அடைய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் வாசுகி, சோக்கோ நிறுவனத்தின் மேலாண்மை நிர்வாகி மகபூப் பாஷா, ஆக்சன் எய்டு நிறுவன நிர்வாகி எஸ்தர் மரிய செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.