Published : 02 Aug 2017 09:04 AM
Last Updated : 02 Aug 2017 09:04 AM

உள்ளாட்சித் தேர்தல் உத்தேச கால அட்டவணை: சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

உள்ளாட்சி தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் நேற்று சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 அக்டோபரில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பாணையில் பழங்குடியினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, உள்ளாட்சித் தேர்தலை 2016 டிசம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்றும், இந்த தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 26-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் அமர்வில் நடந்தபோது மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க 50 நாட்கள் முழுமையாக வேண்டுமென அவகாசம் கோரியது. அதையடுத்து உத்தேச காலஅட்டவணையை ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்

அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் மற்றும் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆகியோர், சீலிட்ட கவரில் உத்தேச காலஅட்டவணையைத் தாக்கல் செய்தனர். அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x