Published : 31 Aug 2017 09:49 AM
Last Updated : 31 Aug 2017 09:49 AM

எம்.ஜி.ஆர் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி டி.ஹரிபரந்தாமனை நியமித்தது செல்லும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

எம்.ஜி.ஆர் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமனை நியமித்தது செல்லும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான சத்யா ஸ்டுடியோ, எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரி, காது கேளாதோர் பள்ளி, ராமாவரம் தோட்டம், எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் மற்றும் ஆலந்தூர் மார்க்கெட் உள்ளிட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் அறக்கட்டளையை யார் நிர்வகிப்பது என்பது தொடர்பாக கடந்த 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஒரு உயில் எழுதி வைத்துள்ளார்.

அந்த உயிலில், சொத்துகள் மற்றும் அறக்கட்டளையை நிர்வகிக்க முதலில் என்.சி.ராகவாச்சாரியையும், அவருக்குப் பின்னர், தன்னுடைய வளர்ப்பு மகள்களில் ஒருவரான லதாவின் கணவர் ராஜேந்திரனையும் எம்.ஜி.ஆர் நியமித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் பிறகு இந்த சொத்துகளை நிர்வகிக்க தகுந்த நபரை உயர் நீதிமன்றம்தான் நியமிக்க வேண்டும் என்றும் அந்த உயிலில் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த உயிலின்படி எம்.ஜி.ஆரின் சொத்துகளை இருவரும் நிர்வகித்து வந்தனர். ராஜேந்திரன் கடந்த 2013-ம் ஆண்டு இறந்து விட்டதால், அறக்கட்டளை மற்றும் சொத்துகளை நிர்வகிக்க தன்னை நியமிக்கக்கோரி லதா ராஜேந்திரன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற வளர்ப்பு மகள்களும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், எம்.ஜி.ஆர் எழுதிவைத்த உயில்படி அவரது சொத்து மற்றும் அறக்கட்டளையை நிர்வகிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமனை நியமித்து கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து லதா ராஜேந்திரன் உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘எம்.ஜி.ஆரின் அறக்கட்டளை மற்றும் சொத்துகளை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமனை நியமித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும்’’ என உத்தரவிட்டு மேல்முறையீ்ட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x