Published : 11 Aug 2017 09:31 AM
Last Updated : 11 Aug 2017 09:31 AM

வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் டெல்லி பயணம்

துணை குடியரசுத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்கும் விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள முதல்வர் கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லியில் சந்தித்து இணைப்பு குறித்து பேச வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

துணை குடியரசுத் தலைவராக வெங்கய்ய நாயுடு தேர்வானதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். அந்த விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று மாலை 5.45 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அதேபோல், முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் இதே விழா வில் பங்கேற்க நேற்று மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றார். இரவு 8 மணிக்கு டெல்லி சென்ற முதல்வர் கே.பழனி சாமியை, அதிமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இன்று காலை வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முதல்வர் கே.பழனிசாமி, பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசுகிறார். அப்போது ‘நீட்’ தேர் வில் தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக மீண்டும் வலியுறுத் துவார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதவிர, ஓ.பன்னீர்செல்வமும் இன்று பிரதமர் மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து ‘நீட்’ தேர்வு மற்றும் தமிழக பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுகிறார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தினகரன் நியமனம், அதிமுக சட்ட விதிகளுக்கு விரோதமானது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், முதல்வர் கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் இரு அணிகள் இணைப்பு தொடர்பாகப் பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்துக்கு முன், இரு அணிகளும் இணையும் சாத்தியம் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x