Published : 14 Aug 2017 09:26 AM
Last Updated : 14 Aug 2017 09:26 AM

பிரதமர் மோடி, அமித்ஷாவுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு: தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

குடியரசு துணைத்தலைவராக வெங்கய்ய நாயுடு கடந்த 11-ம் தேதி பதவியேற்றார். அவ்விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 10-ம் தேதி டெல்லி சென்றார்.

அந்த நிகழ்ச்சியில் முதல்வர் கே.பழனிசாமியும் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கே.பழனிசாமியும், ஓபிஎஸ் தரப்பும் நேரடியாக சந்தித்து பேசி, அணிகள் இணைப்புக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருதரப்பும் பேசிக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மனு அளித்துவிட்டு, சென்னை திரும்பினார். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு, டெல்லியிலேயே ஓபிஎஸ் காத்திருந்தார். ஆனால் பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்ஸுக்கு நேரம் ஒதுக்கப்படாததால், நேற்று முன்தினம் தன் ஆதரவாளர்களுடன் அவர், ஷீரடி சாய்பாபா கோயில், சிக்னாபூர் சனீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கு வழிபாடு முடித்து, நேற்றிரவு டெல்லி திரும்பினார்.

இந்நிலையில், பிரதமரை சந்திக்க இன்று காலை 11 மணிக்கு ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ், தமிழக பிரச்சினைகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து, பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்தும் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. அதன்பின், அனுமதி கிடைத்தால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரையும் அவர் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x