Published : 17 Nov 2014 02:29 PM
Last Updated : 17 Nov 2014 02:29 PM

ஐவர் தூக்கு விவகாரம்: சுஷ்மாவை சந்திக்க மீனவர்கள் முடிவு

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக மீனவப் பிரநிதிகள் (நாளை) செவ்வாய்கிழமை டெல்லியில் சந்திக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் 30 அன்று இலங்கை உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை கண்டித்து தமிழக முழுவதும் மீனவ அமைப்புகள் உள்பட் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேலும் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வமாக மீனவர்கள் விடுதலை தொடர்பாக செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவும், மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ தலைமையில் அருளானந்தம், ராமகிருஷ்ணன், தேவதாஸ், சேசு உள்ளிட்ட தமிழக மீனவப் பிரநிதிகள் நாளை (செவ்வாய்கிழமை) சந்திக்கின்றனர்.

இது குறித்து இளங்கோ கூறியதாவது,

''இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்யவும், கடந்த ஐந்து மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 82 படகுகளை விடுவிக்கவும், யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 24 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்யை சந்திக்கிறோம், என தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஜனவரி 31 அன்று பாம்பனில் நடைபெற்ற கடல் தாமரைப் போராட்டத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவ குடும்பங்களை சந்தித்து சுஷ்மா ஸ்வராஜ் ஆறுதல் சொல்லினார். அப்போது 5 மீனவர்கள் வழக்கு நிலுவையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x