Published : 02 Aug 2017 09:39 AM
Last Updated : 02 Aug 2017 09:39 AM

கிணற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க கோரி வழக்கு: ஓபிஎஸ் மனைவி பதிலளிக்க உத்தரவு- ஆக.21-ல் மீண்டும் விசாரணை

தேனி மாவட்டம், லெட்சுமிபுரத்தில் சர்ச்சைக்குரிய கிணற்றுக்கு வழங்கிய விவசாய மின் இணைப்பை துண்டிக்கக் கோரிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: லெட்சுமிபுரத்தில் 5,000 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஊராட்சி கிணற்றில் இருந்து விவசாயம், குடிநீருக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் புதிதாக கிணறு தோண்டப்பட்டது. இதனால் கிராமத்து பொதுக் கிணற்றில் தண்ணீர் வற்றி குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.

ஓபிஎஸ் மனைவி நிலத்தில் உள்ள கிணற்றில் 15 எச்பி, 20 எச்பி திறன் கொண்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் ஒரு வருவாய் கிராமத்தில் இருந்து இன்னொரு வருவாய் கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

விதி மீறப்பட்டுள்ளது

மின்வாரிய விதிமுறைப்படி, ஆற்றின் கரையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள விளை நிலங்களுக்குத் தான் விவசாயப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், வரட்டாறு கரையில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் உள்ள விஜயலெட்சுமியின் நிலத்துக்கு விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆட்சியர் அறிக்கை

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தேனி மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விதி பொருந்தாது

அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பொது பயன்பாட்டுக்காக மின் இணைப்பு வழங்குவதற்கு 200 மீட்டர் தூர விதி பொருந்தாது.

மேலும், வாகனங்களில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆக.21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x