Published : 04 Aug 2017 09:53 AM
Last Updated : 04 Aug 2017 09:53 AM
கடல் காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கான மழை வாய்ப்பும் குறைந்தது.
வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் கன்னியாகுமரி இடையே, உள் தமிழகம் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் மழை வாய்ப்பு குறைந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்துக்கு மழை வந்திருக்க வேண்டும். ஆனால் கடல் காற்றின் வேகம் தற்போது குறைவாக உள்ளதால், காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளது. அதனால் மழை மேகங்கள் உருவாகவில்லை.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வாய்ப்பு குறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, திருபுவனத்தில் 8 செமீ, செய்யாறில் 4 செமீ, சிவகங்கை திருப்பத்தூர், சென்னையில் தலா 3 செமீ, பரங்கிப்பேட்டை, செய்யூர், உத்திரமேரூர், ராமநாதபுரம், விருத்தாச்சலத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT