Published : 30 Aug 2017 09:12 AM
Last Updated : 30 Aug 2017 09:12 AM

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா: உடல் நிலை சரியில்லை என அரசுக்கு கடிதம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஆர்.முத்துக்குமாரசாமி நேற்று திடீரென ராஜினாமா செய்தார். உடல் நிலை சரியில்லாததால் இந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அரசுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல்.சோமயாஜி ராஜினாமா செய்த பிறகு கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் ஆர்.முத்துக்குமாரசாமி அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசு தலைமை வழக்கறிஞராக பதவியேற்றார் என்பதும், இவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘‘உடல் நிலை சரியில்லை என்பதால் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமாவுக்கும், அதிமுக அணிகள் இணைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் ரீதியிலான காரணம் எதுவுமில்லை’’ என்றார்.

ஆர்.முத்துக்குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து அதிமுக வழக்கறிஞர் அணியினரிடம் கேட்டபோது, ‘‘அரசு தலைமை வழக்கறிஞர் நியமனம் என்பது அரசியலமைப்பு சட்டப்படியான பதவி. ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் அரசு தலைமை வழக்கறிஞருக்கும் உண்டு. இதனால் இந்தப் பதவியை பிடிக்க ஏராளமானோர் போட்டி போட்டு வருகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழல் மற்றும் நிர்பந்தம் காரணமாகவே ஆர்.முத்துக்குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் இப்பதவிக்கு அரசியல் செல்வாக்குடன் வழக்கறிஞர் தொழிலில் நல்ல அனுபவமிக்க ஒருவர் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படலாம். அவர் எந்த அணியைச் சேர்ந்தவர் என்பது இப்போது வரை தெரியவில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x