Published : 13 Aug 2017 09:37 AM
Last Updated : 13 Aug 2017 09:37 AM
மதுரை கூடல்நகர் அருகே அடுத்தடுத்து 2 மதுபானக் கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை கூடல்நகர் பகுதியில் 6 மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால், இதுவரை கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இப்பகுதியில் புதிதாக ஒரு மதுக்கடையை அதிகாரிகள் திறக்கப் போவதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சிலர் நேற்று காலை புதிதாக திறக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட கடையை நோக்கிச் சென்றனர்.
கற்களை வீசி தாக்குதல்
அந்த நேரத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் 2 மதுக்கடைகளை ஊழியர்கள் திறந்தனர். அப்போது அந்த கடைகள் மீது பெண்கள் கற்களை வீசி தாக்கினர். கடை ஊழியர்களையும் தாக்கிய அவர்கள், கடைக்குள் இருந்த மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்தனர். கடைக்குள் இருந்த பிற பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
அடுத்தடுத்த மதுக்கடைகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூடல்புதூர் போலீஸார் மதுக் கடைகளை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் மரியதங்கம்(40) உட்பட 9 பெண்களை கைது செய்தனர்.
இதுகுறித்து மதுக்கடை விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, ‘கூடல்நகர் பகுதியில் ஏற்கெனவே 6 கடைகள் செயல்படுகின்றன. இந்நிலையில், இன்று (12-ம் தேதி) புதிதாக ஒரு கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதையறிந்த பொதுமக்கள், புதிய கடைக்கு எதிராக போராட்டம் நடத்த வந்தபோது எங்கள் மீதும், கடையின் மீது தாக்குதல் நடத்தினர்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT