Published : 12 Aug 2017 08:57 AM
Last Updated : 12 Aug 2017 08:57 AM

தொடர் விடுமுறையால் ஊர் செல்ல ஆர்வம்: கோயம்பேடு, எழும்பூரில் அலைமோதிய மக்கள் கூட்டம் - 900 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதையொட்டி சென்னையில் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், கோயம்பேடு, பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலும் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.

சனி, ஞாயிறு, திங்கள் (கிருஷ்ணஜெயந்தி), செவ் வாய் (சுதந்திரதினம்) என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதையொட்டி, வழக்கம்போல் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர் களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் முதல் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. அதற்கு ஏற்றார்போல், அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

பெருங்களத்தூர், தாம்பரம், பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. வடபழனி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க நீண்ட தூரத்துக்கு வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். ரயிலில் டிக்கெட் கிடைக்காத நிலையில் அரசு சிறப்பு பேருந்துகளிலும், ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: தொடர் விடு முறையையொட்டி நேற்று மதியம் முதல் கோயம்பேடு, பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறோம். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகளும், மற்ற போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 500 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வழக்கத்தை விட 30 சதவீதம் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றனர்.

பயணிகள் 20% அதிகரிப்பு

தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தொடர் விடுமுறையால் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இது வழக்கமான நாட்களைவிட 20 சதவீதம் அதிகமாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x