Published : 06 Aug 2017 11:32 AM
Last Updated : 06 Aug 2017 11:32 AM
தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைவதை போராடியாவது முறியடிப்போம் என மக்கள் அதிகாரத்தின் ‘விவசாயியை வாழவிடு’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில், ‘விவசாயிகளின் பிரச்சினைகள் தீர, விளை பொருட்களுக்கு இடுபொருட்களின் விலையோடு 50 சதவீதம் கூடுதலாக தர வேண்டும். விவசாயிகளும் பங்கேற்கும் உரிமையுடன் கூடிய கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் கீழ் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாங்கியுள்ள வங்கிக் கடன், கந்து வட்டிக் கடன்கள், மைக்ரோ பைனான்ஸ் கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் இந்த செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.
காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட ஊர்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்கள், இளைஞர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்காக 47 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க மத்திய அரசு முயல்வதை போராடி முறியடிப்போம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் மருதையன் தலைமை வகித்தார். இதில், திமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் அப்பாவு, அகில இந்திய கிசான் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த தத்தார்சிங் உள்ளிட்டோர் பேசினர். இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT