Last Updated : 31 Aug, 2017 11:06 AM

 

Published : 31 Aug 2017 11:06 AM
Last Updated : 31 Aug 2017 11:06 AM

திரும்பிய பக்கமெல்லாம் பெண்களிடம் வழிப்பறி: மதுரையில் தொடரும் கொள்ளையர் அட்டகாசம் - மாநகர் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்துமா?

மதுரை நகரில் தொடரும் வழிப்பறி உள்ளிட்ட திருட்டுகளை தடுக்க, காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மதுரை நகரில் உள்ள 24 காவல் நிலையங்களில் கூடல்புதூர், திருநகர், அண்ணாநகர், புதூர், தெப்பக்குளம் உள்பட நகரில் நுழைவு பகுதி காவல் எல்லையில் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச் செல்ல வசதியாக இருப்பதால் புறநகர் பகுதிகளில் வழிப்பறி கும்பல் தொடர்ந்து நகை பறிப்புகளை நடத்தி வருகிறது.

வழிப்பறியில் சிறார்கள்

நகரில் தினமும் ஓரிரு வழிப்பறி, தங்க நகை பறிப்பு, செல்போன் பறிப்பு, பைக் திருட்டு, போலீஸ் போல் நடித்து நூதன திருட்டு, ஏடிஎம்களில் ஏமாற்றி பணத்தை திருடுவது வழக்கமாகி விட்டது.

பெற்றோர்களிடம் பணம் கேட்க முடியாத சூழலாலும், ஆடம்பரமாக செலவு செய்யவும், போதைப் பொருள் வாங்கவும் இளம் சிறார்கள் தற்போது செல்போன், நகை, பறிப்பு சம்பவங்களில் அதிகமாக ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் குற்றச் செயல் புரிந்தததாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சில வழிப்பறி கும்பலைச் சேர்ந்தவர்கள் பின்னணியில் இயக்குவதாக தெரிய வந்தது.

வழக்கமான ரோந்து, சிறப்பு ரோந்து, குற்றப் பிரிவு போலீஸாரின் தீவிர கண்காணிப்பு இருந்தாலும் நகரில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் காலை, மாலையில் பெண்கள், பொதுமக்கள் வெளியில் நடந்துசெல்ல அஞ்சுகின்றனர்.

கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் நகரில் 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், நகரையொட்டிய பகுதிகளில் வழிப்பறி அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

நடவடிக்கை தீவிரம்

சமீபத்தில் மதுரை நகர் காவல் ஆணையராக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால் அதிகரிக்கும் வழிப்பறி குற்றங்களை குறைக்க, பல்வேறு அறிவுரைகளை போலீஸாருக்கு வழங்கினார். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். போலீஸார் துரிதமாக செயல்பாட்டா்ல் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தரமுடியும். காவல் ஆய்வாளர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். போலீஸார் ரெகுலர் ரோந்துக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே குற்றவாளிகளை கண்காணித்து பிடிக்க முடியும் என உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல தினமும் காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றத் தடுப்பு யோசனைகளை வழங்கி வருகிறார். குற்றச் சம்பவம் நடக்கும் இடத்துக்கு உயர் அதிகாரிகள் உடனடியாகச் செல்ல வேண்டும். நிலுவை வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும். வழக்குபதிவு முக்கியமல்ல. அதற்கான தீர்வு என்பது துரிதமாக இருக்க வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும், தாமதமின்றி நடவடிக்கை தேவை என, பல்வேறு உத்தரவுகளை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

உரிய ‘ரிசல்ட்’ இல்லாவிடில் நடவடிக்கை பாயுமோ என, போலீஸாரும் தங்களது பணியை தொய்வின்றி மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிசிடிவி கேமராக்கள்

குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது: புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றபின், நகரில் குற்றச் செயல்கள் ஓரளவு குறைந்துள்ளன. காவல் நிலையங்களில் ஆணையர் திடீர் விசிட், சம்பவ இடத்துக்கு உடனே அவர் வருவதால் போலீஸாருக்கு அச்சம் உள்ளது. குற்றச் சம்பவங்கள் நடந்தால் காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு செல்கின்றனர். இதற்கு முன் அப்படி இல்லை. அவசியமுள்ள இடத்துக்கு மட்டுமே அதிகாரிகள் சென்றனர்.

காவல்துறை ஆணையரின் அதிரடியால் அதிகாரிகள், போலீஸார் பணியில் துரிதம் காட்டுகின்றனர். வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க கூடுதல் முக்கியத்துவம் தருகிறோம். குற்றத் தடுப்பிற்கென 14 குழுக்களும், அந்தந்த காவல் நிலையம் வாரியாக தலா ஒரு குழுவும் செயல்படுகின்றன. ஜூலையில் 3 வழிப்பறியும், கடந்த வாரம் 2 வழிபறியும் நடந்தன. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி அதிகம் நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா உதவியால் சிலரை மடக்கியுள்ளோம். யாகப்பா நகர் லோடு முருகன், முத்திருளன், பீடி பாலா, கார்த்திக், நக்கீரன், மாட்டு ஆனந்தன், நரி உள்ளிட்ட சில வழிப்பறி திருடர்களை கைது செய்துள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x