Published : 04 Aug 2017 09:56 AM
Last Updated : 04 Aug 2017 09:56 AM

மதிமுக தொண்டர்களுடன் இணைந்து சீமை கருவேல மரங்களை அகற்றிய வைகோ

பூந்தமல்லியில் மதிமுக தொண்டர்களுடன் இணைந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஈடுபட்டார்.

நிலத்தடி நீர் மட்டம் குறைவ தோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதால் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிட்டனர். வைகோ உள்ளிட்டோர் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அறிவியல்பூர் வமான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து சீமைக் கருவேல மரங்களை அகற்ற தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, முதல்கட்டமாக நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அகற்றப்பட்ட இடத்தில் வேறு மரங்களை நட வேண்டும் என உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசையில் ஹைவே ஹோட்டல் அருகில் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மதிமுக தொண்டர்கள் நேற்று ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து வைகோவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x