Published : 26 Aug 2017 10:21 AM
Last Updated : 26 Aug 2017 10:21 AM

தினகரன் வீட்டருகே வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிப்பு

சென்னை அடையாரில் உள்ள தினகரன் வீட்டு அருகில் வைத்துள்ள பேனரில் தினகரன் முகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர்.

அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லம் அடையாரில் உள்ளது. அவரது வீடு அமைந்துள்ள தெருவின் இருபுறமும் தினகரன் ஆதரவாளர்களால் தினகரன் , ஜெயலலிதா, சசிகலா படம் பொறித்த பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும்.

அதிமுக துணைப்பொதுச்செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது முதல் அவரது வீடு இருக்கும் தெரு பரபரப்பாக காணப்படுகிறது. சமீபத்தில் அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்ததை அடுத்து தினகரன் தணி அணியாக செயல்பட்டு எதிர்ப்புத்தெரிவித்து வருகிறார்.

துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் அதிமுக அணியில் உள்ள பல கட்சி நிர்வாகிகளை அதிரடியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து கரூர் , சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிமுக அணியினர் தினகரன் கொடும்பாவியை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு தினகரன் இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த இரண்டு பிளக்ஸ் பேனர்களில் ஒரு பேனரை மர்ம ஆசாமிகள் கிழித்துள்ளனர். தினகரன் முகம் மட்டும் பெரிதாக கிழிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். தினகரன் ஆலோசனை பெற்று பின் போலீஸில் புகார் அளிப்பார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x