Published : 02 Aug 2017 01:02 PM
Last Updated : 02 Aug 2017 01:02 PM

இரு அணிகள் இணைந்தால் மட்டுமே மத்தியில் கூட்டணிக்கு வாய்ப்பு: அதிமுகவுக்கு பாஜகவின் நிபந்தனை

பிரிந்துகிடக்கும் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு வாய்ப்புள்ளதாக தமிழக அரசியல் பார்வையாளர்களாக இருக்கும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் அதிமுக இரு அணிகள் இணைந்தால் மட்டுமே தேசிய அளவில் கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குவது என உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசியல் வெற்றிடம்..

அதிமுக இரு அணிகளுக்கும் நெருக்கமான பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, "தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக வலுவான நிலையில் இல்லை. தொண்டர்களை கவர்ந்திழுக்கும் தலைமையும் இல்லை. இத்தகைய சூழலில் தமிழகத்தில் அதிமுக வலுவிழந்து நிற்பது நிச்சயமாக ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் அது மட்டும் பாஜகவை தமிழகத்தில் வலுப்படுத்திவிடாது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் காங்கிரஸும் இணைந்து செயல்பட்டுவருகின்றன. அதிமுக வெற்றிடத்தை நிரப்ப அந்தக் கூட்டணி அதிக முயற்சியில் இருக்கிறது. எனவே, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே தமிழகத்தில் பாஜக அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது சாத்தியமாகும். ஜெயலலிதா இல்லாத அதிமுக நிச்சயமாக நாங்கள் விரும்பும் கூட்டணியே. ஆனால், அது அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்வரையிலும் பிரிந்தேகிடக்குமானால் எதிர்க்கட்சியிடம் தோல்வியடையும் நிலையில் நிற்கும். அத்தகைய பிளவுபட்ட அதிமுக எங்களுக்கு உகந்தது அல்ல" என்றார்.

மத்திய அரசை ஆதரிக்கும் இரு அணிகள்..

"குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களில் அதிமுக பாஜக வேட்பாளர்களை ஆதரித்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளுமே மத்திய அரசுக்கு சாதகமாகவே செயல்படுகின்றன. இதனால், தமிழக அரசின் வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பிரதமர் மோடியும் உறுதியாக இருக்கிறார்" எனக் கூறினார் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் ஒருவர்.

சிறு கட்சிகளும் கூட..

"அதிமுக இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே கூட்டணி குறித்த அடுத்தகட்டத்துக்கு நகர முடியும். ஓபிஎஸ் அணியில் சில எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர். சசிகலா அணியிலும் எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆனால், சசிகலா அணி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே இரு அணிகளும் இணைந்து ஓரணியாக வந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி அமையும். தமிழகத்தின் இன்னும் பிற சிறிய கட்சிகளையும் இணைத்து ஒரு முன்னணி அமைக்க பாஜக தயாராகவே இருக்கிறது" என்றார் பாஜகவின் தலைவர் ஒருவர்.

ரஜினியின் முடிவும் முக்கியம்..

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதையும் பாஜக கவனித்துவருகிறது. அவர் பாஜகவுடன் இணைவாரா அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா இல்லை அரசியலைவிட்டே ஒதுங்குவாரா என்பதை பாஜக கூர்ந்து கவனித்துவருகிறது என்றும் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

முக்கியத்துவம் வாய்ந்த அமித் ஷா வருகை..

தமிழகத்தில் காலூன்ற அதிமுக அணிகள் இணைவது அவசியம் என்று பாஜக கருதும் சூழலில்தான், ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கி பாஜகவின் அமித் ஷா மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

சென்னை, மதுரை, கோவைக்கு அவர் செல்கிறார். கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நம்புத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x