Published : 24 Jul 2017 09:51 AM
Last Updated : 24 Jul 2017 09:51 AM

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கே.என்.நேரு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஆவணங்கள் மீண்டும் ஆய்வு: லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

கே.என்.நேரு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசா ரிக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த ஆவணங்களை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

2006-11-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந் தவர் கே.என்.நேரு. பதவிக் காலத்தின்போது கே.என்.நேரு, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து திருச்சி தனி நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு வழக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்து திருச்சி தனி நீதிமன்றத்தில் நேரு தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதனை எதிர்த்து நேரு மனு தாக்கல் செய்தார். இதில் நேரு தன் மகன் அருண் மூலம் ரூ.60 லட்சத்தை பெற்றதாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டு இதனை சொத்துக் குவிப்பாக கருத முடியாது என்று கூறி குற்றச் சாட்டிலிருந்து நேரு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலை யில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கே.என்.நேரு மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்தது.

முழு ஒத்துழைப்பு

இதுதொடர்பாக கே.என்.நேருவின் குடும்ப வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரனிடம் கேட்டபோது, ‘கே.என்.நேரு, அவரது மனைவி சாந்தா ஆகியோர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை. முழுக்க, முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு இது. கே.என்.நேருவுக்கும், அவரது மகனுக்குமான வரவு, செலவுகள் மற்றும் வருமானங்கள் குறித்த அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளன. எனவே, இதுதொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினால் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம். அவர்களிடமிருந்து இதுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை’ என்றார்.

இதுதொடர்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, "உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சொத்துக் குவிப்பு தொடர்பான ஆவணங்களை மீண்டும் ஆய்வு செய்து வருகிறோம். உயரதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு, இவ்வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x