Published : 21 Jul 2017 09:08 AM
Last Updated : 21 Jul 2017 09:08 AM

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒருநாள் முழுவதும் நடந்தது

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று ஒருநாள் முழுவதும் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளி்ட்ட இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு 15 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர் கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு, கடந்த ஜூலை 14-ம் தேதி தமிழக அரசின் 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதுபோல மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஒருநாள் முழுவதும் நடந்தது.

தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞரும், மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பலரும் ஆஜராகி நீண்டநேரம் வாதிட்டனர்.

வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தில், ‘‘தமிழகத்தில் முன்பு மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய 4 பாடத்திட்டங்கள் மாநில பாடத்திட்டமாக இருந்தன. இந்த வேறுபாடுகளைக் களைந்து தமிழக அரசு ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வித் திட்டத்தை கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வந்தது. மாநில அரசின் இந்த சமச்சீர் பாடத் திட்டமும், மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டமும் வேறு வேறு அளவுகோளைக் கொண்டவை.

தமிழகத்தின் கல்வி போதிக்கும் முறைகள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.

அந்த முறைகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இல்லை. தவிர, சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமப்புறங் களில் கிடையாது. தமிழகத்தில் மொத்தம் 4.20 லட்சம் பேர் இந்தாண்டு மாநிலப் பாடத்திட்டத் தின்கீழ் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்துள்ளனர். நீட் தேர்வில் பங்கேற்றவர்களில் 95 சதவீதம் பேர் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர் கள். வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. வசதியான மாணவர்கள்தான் சிபிஎஸ்இ பள்ளிகளி்ல் படித்து வருகின்றனர். அவர்களோடு, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர மாணவர்களை ஒப்பிடக்கூடாது. உள் ஒதுக்கீடு வழங்காமல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி னால், அதனால் நன்றாக படிக்கும் மாநிலப் பாடத்திட்ட மாணவர் களும், கிராமப்புற மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். காரணம், நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நடத்தப் பட்டுள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு குழப்பங்களால் தமிழக மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் குழம்பிப் போய் உள்ளனர். இந்தச் சூழலில் இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதால் தற்போது மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மேலும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த உள் ஒதுக்கீடு மூலமாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு கூடுதலாகத்தான் இடம் கிடைக்கும்’’ என குறிப்பிட்டனர்.

வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x