Published : 31 Jul 2017 10:32 AM
Last Updated : 31 Jul 2017 10:32 AM
பராமரிப்புப் பணி மற்றும் கொதிகலன் குழாய் பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளில் 1,830 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் என 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகா வாட் என 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகின்றன.
இந்நிலையில், 2-வது நிலையின் முதல் அலகில், பராமரிப்புப் பணிக்காக நேற்று முன்தினம் இரவு முதல், 600 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் நிலையின் முதல் அலகில், கொதிகலன் குழாயில் நேற்று முன்தினம் இரவு திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து, அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால், வடசென்னை அனல் மின் நிலையத்தில், 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, முதல் நிலையில் உள்ள முதல் அலகின் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பணி முடிந்த பிறகு, 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT