Published : 02 Jul 2017 10:15 AM
Last Updated : 02 Jul 2017 10:15 AM

ஜிஎஸ்டி வரி சட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்தில் முதல் பரிவர்த்தனை

ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் இறக்குமதியில் முதல் பரிவர்த்தனை சென்னையில் நேற்று நடந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி சட்டம், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலானது. அதன் ஒருபகுதியாக சென்னையில் ஜிஎஸ்டி அறிமுக விழா நேற்று நடந்தது. இதை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ், சுங்கம், கலால்வரி தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர் சி.ராஜேந்திரன், சுங்க வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் பி.கே.தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் இறக்குமதியை பொறுத்தவரை நாட்டிலேயே முதல் பரிவர்த்தனை சென்னையில் நடந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருளுக்காக ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட பாஸ் நிறுவனம் ஜிஎஸ்டி-யின் கீழ் வரி செலுத்தியுள்ளது. இன்று (நேற்று) காலை 6 மணிக்கு அந்த பரிவர்த்தனை நடைபெற்றது.

ஜிஎஸ்டி சட்டம் அமலானதால் உரங்களுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடலை மிட்டாய்க்கு ஜிஎஸ்டி-யில் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் தவறான தகவலை பதிவிட்டு வருகின்றனர். கடலை மிட்டாய் பிராண்டட் பெயரில் விற்கப்பட்டால் மட்டுமே ஜிஎஸ்டி வரி உண்டு. ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால் அந்த நிறுவனம் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x