Published : 29 Jul 2017 08:18 AM
Last Updated : 29 Jul 2017 08:18 AM
வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று காலை 10 - 12 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் கலச பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் 500 தம்பதிகள் பங்கேற்கலாம்.
இதற்காக ஒரு தம்பதிக்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். மேலும் நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்ப்பதற்கு வசதியாக பெரிய அளவிலான எல்இடி டிவிக்களும் வைக்கப்பட உள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய இணை நிர்வாக அதிகாரி போலா பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
வரலட்சுமி விரதத்தையொட்டி திருச்சானூர் முதல் திருப்பதி வரை அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரம் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அன்று மாலை பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவையொட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT