Published : 23 Jul 2017 12:45 PM
Last Updated : 23 Jul 2017 12:45 PM
திண்டிவனத்தில் டாக்டர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 250 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
திண்டிவனம் - ஜெயபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் கஜேந்திரன். டாக்டரான இவர், கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த ஒரு மாதமாக சென்னையில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறார். கஜேந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று கிளினிக் முடிந்த பின் வீட்டுக்கு வந்த டாக்டர் கஜேந்திரன், சாப்பிட்டு விட்டு உறங்கி விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் சமையலறை ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பூஜை அறையிலிருந்த இரும்பு லாக்கரை, சமையலறைக்கு கொண்டு வந்து உடைத்துள்ளனர். அதில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இக்கொள்ளை குறித்து நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் காவல் நிலையத்தில் டாக்டர் கஜேந்திரன் புகார் செய்தார். தகவல் அறிந்த டிஐஜி பாலகிருஷ்ணன், எஸ்பி ஜெயகுமார் உள்ளிட்ட போலீஸார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT