Published : 15 Nov 2014 05:01 PM
Last Updated : 15 Nov 2014 05:01 PM

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் உண்மை நிலையை அறிவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம்

இலங்கை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் உண்மை நிலை குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சனிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

கடந்த நவம்பர், 28, 2011 அன்று ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். பின்னர் போதைப் பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்து வழக்குத் தொடரப்பட்டு கடந்த அக்டோபர் 30 அன்று 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த தீர்ப்புக்கு எதிராக மீனவ அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வந்தன.

இந்த வழக்கில் மேல்முறையீட்டு செய்ய முடிவு செய்த மாநில அரசு கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

புதன்கிழமை இலங்கை அமைச்சர் பிரபாக கணேசன் ''மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க இலங்கை அதிபர் ராஜபக்சே தயாராக உள்ளதாகவும் அதற்கு மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இலங்கை மலையக மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான் மீனவர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்தாகவும் அறிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் தங்களின் 15 நாட்கள் தொடர் போராட்டங்களை திரும்பப் பெற்று கடலுக்குச் சென்றனர்.

இந்நிலையில், இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் மோகன் சமரநாயக்க ''இந்திய மீனவர்கள் வழக்கு குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். ஆனால் மீனவர்கள் விடுதலை குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, என தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் தண்டனை குறித்த உண்மையான நிலையினை மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் மகளிர் மீனவர் கூட்டமைப்பின் தலைவி இருதயமேரி கூறியதாவது,

கடந்த மே 25 அன்று பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு இலங்கை அதிபர் ராஜபக்சே நல்லெண்ண அடிப்படையில் எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்களை அப்போதே விடுதலை செய்ய உத்திரவிட்டிருந்தார். ஆனால் அப்போதே அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.

தற்போது, மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற சம்மதம் தெரிவித்தார் இலங்கை அதிபர், மேல்முறையீட்டை வாபஸ் பெற்றால் இலங்கை அதிபர் மீனவர்களை மன்னிப்பார், இலங்கை அதிபர் மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்து விட்டார் என தினந்தோறும் இலங்கையிலிருந்து அதிபாரபூர்வமற்ற செய்திகளை பரப்பி விடுகிறது. இந்தச் செய்திகள் எதனையும் தமிழக அரசோ, மத்திய அரசோ இதுவரையிலும் உறுதிப்படுத்தவே இல்லை.

எனவே மத்திய, மாநில அரசு தரப்பில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட உண்மையான தகவல் வரும்வரை தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடரப் போகிறோம், என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x