Published : 14 Jul 2017 11:33 AM
Last Updated : 14 Jul 2017 11:33 AM

மருத்துவப் படிப்பில் 85% உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவரான தர்னீஷ்குமார், சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதில், ''சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் உள்ள 2,500 இடங்களில் 319 இடங்கள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிவிட்டு தற்போது மாநில வழிக்கல்வி, மத்திய வழிக்கல்வி என மாணவர்களை பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. மருத்துவ கவுன்சில் விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர். ஓபிசி பிரிவினர் என்ற அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, பாடத் திட்டத்தின் அடிப்படையில் 85 சதவீத உள் இடஒதுக்கீட்டை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்குவது என்பது சட்ட விரோதமானது. இந்த அரசாணையை செயல்படுத்தும் அதிகாரமும் தமிழக அரசுக்கு கிடையாது. எனவே கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என அதில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு பிறப்பிக்கும் வரை தரவரிசைப்பட்டியலை வெளியிடவோ அல்லது கலந்தாய்வை நடத்தவோ கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு இன்று (14-ம் தேதி) தரவரிசைப் பட்டியலை வெளியிடவும், 17-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, தமிழக அரசின் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x