Published : 08 Jul 2017 08:49 AM
Last Updated : 08 Jul 2017 08:49 AM

ஐஐடி கலந்தாய்வு, மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஐஐடி கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால விதித்தது.

இந்தியாவில் சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி, கான்பூர், புவனேஸ்வரம் உள்பட 23 இடங்களில் ஐஐடி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் ஜெஇஇ (அட்வான்ஸ்டு) நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. 2017-2018-ம் கல்வி ஆண்டு ஐஐடி மாணவர் சேர்க்கைப் பணியை சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அண்மையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ஜெஇஇ (அட்வான்ஸ்டு) நுழைவுத் தேர்வில் தவறாக கேட்கப்பட்டிருந்த 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஐடி கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மறுஉத்தரவு வரும்வரை இத்தடை அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு விசாரணை, ஜூலை 10-ம் தேதிக்கு (திங்கள்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x