Published : 23 Jul 2017 12:00 PM
Last Updated : 23 Jul 2017 12:00 PM

சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வா? - சாத்தியமில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

சட்டப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டாலும் தமிழகத்தில் அதற்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு சட்டக் கல்வித் துறை இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.எஸ்.சிவ ஞானம், வி.பவானி சுப்ராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினர். இளங்கலை, முதுகலை, சட்ட ஆராய்ச்சி என மொத்தம் 1,350 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதால் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

விழாவில் நீதிபதி என்.கிருபாகரன் பேசும்போது, ‘‘மோட்டார் வாகன விபத்து மற்றும் குடும்ப நல வழக்குகளில் இளம் வழக்கறிஞர்களாகிய நீங்கள் தயவு செய்து கட்சிக்காரர்களிடம் பங்கு கேட்காதீர்கள். உங்களது ஊதியத்தை மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள். நீதிபதிகளிடம் உரத்த குரலில் வாதம் செய்யுங்கள். வாக்குவாதம் செய்யாதீர்கள். நீங்கள் பேசுவது உங்களுக்காக அல்ல. உங்களை நம்பியுள்ள கட்சிக்காரர்களுக்காக என்பதை மனதில் கொள்ளுங்கள். குடும்ப நல நீதிமன்றங்கள் அதிகரிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல. நீங்கள் தொழிலில் மட்டுமல்லாது குடும்ப வாழ்விலும் வெற்றி பெற வேண்டும்’’ என்றார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:

சீர்மிகு சட்டக் கல்லூரியில் உள்ள அனைத்து வசதிகளும் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் ஏற்படுத்தப்படும். 171 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் சைபர் கிரிமினல் லாவும், வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பும் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் சேமநல நிதி உயர்வு தொடர்பான உத்தரவை விரைவில் முதல்வர் பழனிசாமி பிறப்பிப்பார். ராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி ஆகிய இடங்களில் 3 புதிய சட்டக் கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் செயல்படும்.

அரசு இணையதளத்தில் தொடர்பு எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இ-மெயில் ஐடி, தொடர்பு எண்கள் என அனைத்தும் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியக் கொள்கை. அதை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டப்படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டாலும் தமிழகத்தில் அதற்கு சாத்தியமில்லை. தனியார் சட்டக் கல்லூரிகளை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வரும் உத்தரவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x