Published : 13 Jul 2017 08:25 AM
Last Updated : 13 Jul 2017 08:25 AM

ஜவுளிக்கான ஜிஎஸ்டி-யை குறைக்க அதிமுக எம்எல்ஏ வேண்டுகோள்

ஜவுளிக்கான ஜிஎஸ்டி-யை குறைத்து அத்தொழிலை பாதுகாக்க வேண்டும். பத்திரப் பதிவுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக நேற்று நடந்த விவாதம்: செந்தில் பாலாஜி (அதிமுக): ஜவுளித்தொழிலுக்கு அதிகளவு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும். பத்திரப்பதிவு கட்டணத்தையும் 1 சதவீதமாக மீண்டும் குறைக்க வேண்டும்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: எங்கள் உறுப்பினர் பேசினால் உடனடியாக அமைச்சர் குறுக்கிட்டு பதிலளிக்கிறார். உங்கள் உறுப்பினர் என்றால் பதிலளிக்கவில்லை.

அமைச்சர் கே.சி.வீரமணி: ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட தொழில் செய்பவர்கள் தற்போது வரி தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இது தொடர்பாக பேசி குறைக்க அரசு முயற்சி மேற்கொள்ளும்.

செந்தில் பாலாஜி: என் தொகுதி ஜவுளித்தொழில் சார்ந்தது என்பதால் அவர்கள் பிரச்சினையை எடுத்து வைத்தேன். பாதிப்புகள் குறித்து அவர்களுடன் ஆலோசிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் வீரமணி: ஜிஎஸ்டி முதலில் அமல்படுத்தப்பட்ட போது ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். மாநிலத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஏற்பதாகவும் கூறினார். அதன்பின் 26 மாநிலங்கள் ஜிஎஸ்டியை ஏற்றுக் கொண்டன. அறிமுகப்படுத்தப்பட்டபோது குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி கடுமையாக எதிர்த்தார். அதன்பின் அவரே பிரதமராக வந்தபோது திருத்தங்களை செய்து அமல்படுத்தினார்.

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): தற்போது நீங்கள் ஜிஎஸ்டியை ஏற்கிறீர்களா? இல்லையா? உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.

அமைச்சர் வீரமணி: ஜிஎஸ்டியை கொண்டுவந்ததே நீங்கள்தான். தற்போது அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்று எங்களை கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்?

அமைச்சர் டி.ஜெயக்குமார்: ஜிஎஸ்டி அமல்படுத்திய நிலையில் நம்மால் மதிப்புக்கூட்டு வரியை விதிக்க முடியாது. எனவேதான் ஜிஎஸ்டி ஏற்கப்பட்டது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x