Published : 19 Jul 2017 02:04 PM
Last Updated : 19 Jul 2017 02:04 PM

கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவைக் கலைப்பது குறித்து ஜூலை 31-ல் முடிவு: உயர் நீதிமன்றம்

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவைக் கலைப்பது குறித்து ஜூலை 31-ல் முடிவு செய்யப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராஃபி்க் ராமசாமிஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி அதிகாரி சகாயமும் விசாரணை நடத்தி ரூ.ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்திருப்பதாக அறிக்கையை சமர்ப்பித்தார்.

இந்நிலையில் சகாயம் குழுவில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற தாசில்தாரான மீனாட்சி சுந்தரத்துக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, ''ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு மொத்தம் ரூ. 58 லட்சம் வழங்கப்பட்டுள்ளது'' எனக்கூறி அதற்கான அரசு உத்தரவை சமர்ப்பித்தார்.

அதைப்படித்துப் பார்த்த நீதிபதிகள், ''அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு சம்பளம் வழங்கியது குறித்து எதுவுமில்லை என்றும், மேலும் விசாரணைக்குழுவைக் கலைப்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும்'' என்றனர்.

கிரானைட் தொழிற்சாலைகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் அறிக்கையில் ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. மேலும் அந்த விசாரணைக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ததுடன் அதன் பணி முடிந்து விட்டது. குழுவை நீட்டிக்க முடியாது'' என வாதிட்டார்.

அப்போது சகாயம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ''ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் அறிக்கை மீது சந்தேகம் கொள்வது அவரது நேர்மையை சோதிப்பதற்கு சமம்'' என ஆதங்கம் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமாராசாமி ஆஜராகி, ''சகாயம் குழுவைக் கலைக்க 2015-லேயே அப்போதைய தலைமைநீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவிட்டிருந்தார். அதற்குப் பிறகு சகாயம் குழுவுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை

அரசு சார்பில் விசாரணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட கணினி, மேசை உள்ளிட்ட பொருட்கள் அரசிடமே திருப்பி வழங்கப்பட வேண்டும்'' என்று வாதிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜூலை 31-ல் சகாயம் குழுவைக் கலைப்பது குறிப்பது முடிவெடுக்கப்படும் என்று கூறி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x