Published : 10 Jul 2017 12:23 PM
Last Updated : 10 Jul 2017 12:23 PM

மர்மக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்: வாசன்

மர்மக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் பருவகால மாற்றம் ஏற்பட்டிருப்பதால் ஆங்காங்கே வைரஸ், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சாதாரண ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நோயினால் பாதிக்கப்படும்போது அவர்கள் அரசு மருத்துவமனையை நாடுவது இயல்பான ஒன்று.

அவர்களுக்கு நோய் தடுப்பு முறையை முறையாக கையாண்டு காப்பாற்ற வேண்டியது அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பணியாகும். இதனை தொடர்ந்து கண்காணித்து நோயாளிகளை பாதுகாக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்தால்தான் அரசு மருத்துவமனையை நம்பி வரும் சாதாரண மக்கள் பயன்பெறுவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும்.

ஏற்கெனவே நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரம், சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்டம் போன்ற பகுதிகளில் டெங்கு, வைரஸ், மர்மக் காய்ச்சல் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிகிச்சை பலனின்றி சிறுமி, பெண் உட்பட சிலர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இதுபோன்ற வேதனைக்குரிய உயிரிழப்பைத் தவிர்க்க சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.

தமிழக சுகாதாரத்துறை 24 மணி நேர மருத்துவ சேவையை உரிய முறையில் அளித்து நோய் தாக்கியவர்களை காப்பாற்ற வேண்டும். தற்போதைய பருவ கால மாற்றத்தால் மழைக்காலம் துவங்கி சீதோஷ்ண சூழ்நிலை மாறியதாலும், மழை நீர் தேங்கி சுகாதாரம் சீர்கேடு அடைவதாலும் நோய் உருவாகி, வேகமாக பரவும் சூழல் உள்ளது. பொதுமக்களும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

பருவ காலம் மாறிய உடனேயே தமிழக சுகாதாரத்துறை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்களிடம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேலும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் நோய் தாக்கப்பட்டவர்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற போதிய மருத்துவர்கள் இருக்கிறார்களா என்பதையும், தேவையான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து சுகாதார மையங்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நகரம் முதல் கிராமம் வரை ஆங்காங்கே நடமாடும் சுகாதார மையங்களை பயன்படுத்தி நோய் தாக்குவதிலிருந்து பொது மக்களை காப்பாற்ற சுகாதாரச் சேவையை தொடர்ந்து அளித்திட வேண்டும்.

தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசு பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்கும், நோய் தாக்கப்பட்டவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவதற்கும், நோய் பரவாமல் இருப்பதற்கும் தொடர் கண்காணிப்பு, சிறப்பு சிகிச்சை முறை, விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கும், கழிவு நீரையும், குப்பைகளையும் அப்புறப்படுத்துவதற்கும், கொசு உற்பத்தியாகாமல் இருப்பதற்கும், கொசு ஒழிப்புக்கும் மற்றும் வீடு, கடை, கட்டிடம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதற்கும் மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தொடர் நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமை'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x