Published : 19 Jul 2017 11:05 AM
Last Updated : 19 Jul 2017 11:05 AM
நகர் பகுதியில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த, தேசிய வேளாண் தோட்டக்கலை திட்டத்தின் மாடித் தோட்ட திட்டம் தற்போது கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதியில் தேசிய வேளாண்மை தோட்டக்கலை திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் நகர் பகுதிகளில் மட்டுமே மாடி தோட்டம் அமைக்க விதைகள் அடுக்கப்பட்ட 'கிட்' வழங்கப்பட்டு வந்தது. இது விரிவுபடுத்தப்பட்டு இந்த ஆண்டு முதல் கிராம மக்களுக்கும் மானியத்தில் மாடி தோட்ட விதை 'கிட்' வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 'கிட்' ஒன்று 523 ரூபாய் ஆகும். அதில் 40 சதவிகிதம் மானியத் தொகையாக வழங்கப்பட்டு மீதமுள்ள 323 ரூபாய் மட்டும் கொடுத்து மாடித்தோட்ட 'கிட்'டை பெறலாம். அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலை பிரிவில் இதனை பெற்றுக் கொள்ளலாம்.
கடந்தாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இத்திட்டத்தில் இந்த ஆண்டு முதல் மாடி தோட்ட விதைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடி தோட்ட விதைப் பையில் தென்னை நார் கழிவுடன் கூடிய 6 கேரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் ஊற்றினால் அது விரிவடைந்து பயிரிடும் பையாக மாறும். கத்திரி, மிளகாய், தக்காளி, பாகல், அவரை, முள்ளங்கி, வெண்டை, கொத்தமல்லி, கீரை, கொத்தவரங்காய் உள்ளிட்ட விதைகள் இந்த விதைப் பையில் இருக்கும். செடிகளுக்கு வேர் அழுகல் நோய் தாக்காமல் இருக்கும் வகையில் உரம் மற்றும் நுண்ணுயிர்கள், பூச்சி நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெயும் இதனுடன் இணைந்து வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் சேர்த்துதான் இந்த விதை 'கிட்'டில் இருக்கும்.
இதனை வாங்கி மாடித் தோட்டம் அமைக்க விரும்புகிறவர்கள், இரு பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன், ஆதார் கார்டு நகல் தந்து அந்தந்த பகுதி வேளாண் அலுவலகத்தில் விதை கிட்டை பெறலாம். கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடி தோட்ட விதைப்பைகள் வேளாண் அலுவலகத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்யும் ஆர்வத்தை அதிகரிக்க இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT