

கடந்த 2009-ல் தீபாவளியின் போது பள்ளிப்பட்டு பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியான 32 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசும், பட்டாசுக் கடை உரிமையாளரும் சேர்ந்து ரூ.2.76 கோடி இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப் பட்டு-சோளிங்கர் சாலையில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில், ஆனந்தகுமார் என்பவர் பட்டாசு கடை அமைத்திருந்தார். 16.10.2009 அன்று மாலையில் திடீரென அந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலியாகினர். இதில் 27 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். பலியான 32 பேருக்கும் தமிழக அரசு தலா ரூ.1 லட்சமும், ஆந்திர அரசு 27 பேருக்கு தனியாக தலா ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கின.
மாவட்ட வருவாய் துறை அதிகாரி நடத்திய விசாரணையில் அந்த பட்டாசுக் கடை உரிமம் பெறா மலும், முறையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காமலும் நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளிப்பட்டு போலீஸார் பட்டாசுக் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் பலியான 32 பேரின் வாரிசுகள் தங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி கடந்த 2011-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:
அந்த பட்டாசுக் கடையை சம் பந்தப்பட்ட எந்த அதிகாரிகளும் முறையாக ஆய்வு செய்யவில்லை. அளவுக்கு அதிகமான பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டதே தீ விபத்துக்கு காரணம். இந்த தீ விபத்துக்கு அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும், அலட் சியப்போக்கும் ஒரு காரணம். ஒருவேளை உரிமம் பெற்று இந்தக் கடையை நடத்தியிருந்தாலும்கூட இந்த விபத்தை தடுத்து நிறுத் தியிருக்க முடியாது. அந்த அள வுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை கடையின் உரிமையாளரும், அரசு அதிகாரிகளும் மீறியுள்ளனர். எனவே இந்த விபத்தில் சிக்கி பலியான 32 பேரின் இழப்புக்கு தமிழக அரசும், கடையின் உரிமையாளரும்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
விபத்தில் சிக்கி பலியான 32 பேரின் குடும்பத்தினருக்கும் ரூ.6.15 லட்சம் முதல் ரூ.17.75 லட்சம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு மொத்தமாக செலவாகும் ரூ.2.76 கோடியை தமிழக அரசும், கடையின் உரிமையாளரும் தலா 50 சதவீதம் என்ற அடிப்படையில் தங்களுக்குள் பங்கிட்டு, 3 மாதங்களுக்குள் 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்க வேண்டிய 50 சதவீத இழப்பீட்டுத் தொகையில் ஏற்கெனவே தமிழக அரசும், ஆந்திர அரசும் வழங்கியுள்ள இழப்பீட்டுத் தொகையை கழித்துக்கொண்டு மீதித் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.